Tuesday, August 11, 2020

இன்று கோகுலாஷ்டமி..

 
 
 
கலாச்சாரங்களில் பின்னிப் பிணைந்தது நம் பாரதம்! இங்கு நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பின்னணி உண்டு. இவை ஒவ்வொன்றும் நமக்கு பல உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன.

நமது பண்டிகைகளில் கிருஷ்ணஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் 'கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது.   தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.
பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான்.

மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது. தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன்.

இப்படி கண்ணபிரானின் பெருமையானது வர்ணிக்க முடியாததாகும். அவரின் விஸ்வரூப தரிசனத்தை எப்படி வர்ணிக்க முடியாதோ அதுபோல் அவருடைய பெருமைகளையும் வர்ணிக்க இயலாது.

அவதாரங்களுள் ஒருவரான ஸ்ரீ கிருஷ்ண பகவானின் ஜென்மாஷ்டமி இன்று  கொண்டாடப்பட இருக்கின்றது. அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.

அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனைத் தத்தம் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் உறியடித் திருவிழா நடைபெறும். மங்களகரமான இந்நாட்களில் உலகில் உள்ள பக்தர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கிருஷ்ண பரமாத்மா அருள நாம் அவரை கீத கோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் போன்ற பல ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்குவோம். ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

வழிபாட்டு முறை...

வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்ய வேண்டும். கிருஷ்ணர் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த தயிர், வெண்ணெய், அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளை வைக்கவேண்டும். முடிந்த அளவுக்கு பூஜையை மாலை 6.00 – 7.00 மணிக்குள் செய்தால் சிறப்பு.

“நீ எனக்கு ஒரு இலையைக் கொடு; அல்லது பூவை கொடு; இல்லை ஒரு பழத்தைக் கொடு; அதுவும் இல்லையென்றால், கொஞ்சம் தண்ணீர் கொடு; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்” என்றார் கீதையில் கண்ணன். பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம் படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ண பரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைப்போல் காப்பார்.

ஊரில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். ஆடல், பாடல், கோலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் ஆடுவதைப் பார்க்கும் போது, கண்ணன் ஒவ்வொரு கோபியர்களிடமும் ஆனந்த நடனம் ஆடிய தீராத விளையாட்டுப் பிள்ளையை நினைவுபடுத்தும். இவ்வேடமிட்ட குழந்தைகள் புத்திசாலியாக செயல்படுகிறார்கள். கண்ணனின் பரிபூரண அருள் இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது.

பலன்கள்...

கிருஷ்ண ஜெயந்தியில் கண்ணனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சி தங்கும், அகந்தை அகலும், மூர்க்க குணம் குழந்தைக்கு ஏற்படாது. தர்மசீலராக இளைஞர்கள் வருவார்கள். அரசியல் ஞானம் உண்டாகும். நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மாமனார் வழியில் சொத்துக்கள் கிடைக்கும். திருமணத் தடைகள் அகலும், செல்வம் பெருகும். வயல்களில் விளைச்சல் அதிகரிக்கும், ஆடு, மாடுகள் பல்கிப் பெருகும், கடன் தீரும், பகைமை ஒழியும், நண்பர்கள் கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். புகழ் கூடும், அமைதி நிலவும், ஆற்றல் பெருகும், வறுமை இல்லா வாழ்வு அமையும்.

வழிபாடு செய்யும்போது ‘கோவிந்தா’ என்று அழைத்து வழிபாடு செய்தால் அதிகப் பலன்களைப் பெறலாம். அதன் பொருள் பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன். பூமியை தாங்குபவர். இதனால்தான் ஆதிசங்கரரும், பஜகோவிந்தம் பாடுங்கள் அது மரண பயத்தைப் போக்கும் மந்திரம் என்றார்.

கிருஷ்ண ஜெயந்தி வழி பாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டுப் படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

கண்ணபிரானின் கோகுலாஷ்டமி தினத்தில் அவரைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் படித்து, பூஜைகள் செய்து, அவர் அருள் பெற்று, அறியாமையிலிருந்து அகன்று, எல்லா நலன்களையும பெற்று, பரிபூரண ஆனந்தத்தையும், பகவான் அனுகிரஹத்தையும் பெறுவோமாக!
 
- தமிழ் கருடா 
 
 
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

No comments:

Post a Comment