Friday, September 4, 2020

16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு.


 

 திருப்பத்தூர் அடுத்த செலந்தம்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, லெமூரியா திட்ட மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் திருப்பத்தூர் தாலுக்காவுக்கு உட்பட்ட மடவாளம் அடுத்த செலந்தம்பள்ளி கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டபோது நடுக்கல் ஒன்றும், உடன்கட்டை நடுக்கல் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறுகையில், "திருப்பத்தூர் அடுத்த மடவாளம் செலந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அரங்கதிருமால், பிரபு மற்றும் வேலு ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் அந்தக் கிராமத்தில் கள ஆய்வு நடத்தினோம். இதில், அந்தக் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் மேற்குப் பகுதியில், விவசாயி வில்வநாதன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 2 நடுகற்கள் இருப்பதைக் கண்டறிந்தோம்.

கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லானது 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இக்கல்லில் வீரனின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உடன்கட்டை நடுகல் ஒன்றும் அங்கு உள்ளது. இக்கல்லானது 2 அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது.

பண்டைய காலம் தொட்டே தமிழகத்தில் நீதி வழங்கும் முறைகளும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கும் முறைகளும் வழக்கத்தில் இருந்துள்ளன. குற்றங்கள் புரியும் மனிதர்களுக்கு அவர்களின் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெருங்குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒருவரைக் கொடூரமாகக் கொல்லும் தண்டனை 'கழுவேற்றம்' என்பதாகும். அதாவது, மரக்கட்டையை நட்டுவைத்து அதில் கூர்மையான முனையை ஏற்படுத்தி, பிறகு தண்டனைக்கு உரியவர்கள் கூர்மையான முனையில் அமர்த்தப்படுவர்.

அந்தக் கூர்மையான முனை தண்டனைக்கு உரியவரின் ஆசனவாயில் சென்று பொருந்தும். இதனால், தண்டனை பெறுவோர் உயிர் சிறிது, சிறிதாகப் பிரியும். இறந்து போன மனிதனின் உடலை அப்படியே விட்டுவிடுவார்கள். பிறகு விலங்குகள், பறவைகள் அந்த மனித உடலைத் தின்றுவிடும். இத்தகைய கொடிய தண்டனையே 'கழுவேற்றம்' என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது.

அத்தகைய கழுவேற்ற நடுகல் வகையே செலந்தம்பள்ளியில் நடுகல்லாக கிடைத்துள்ளது. மரக்கட்டையில் மேலாக கழுவேற்றப்பட்ட வீரன் அமர்ந்துள்ளார். பெரிய மேல்கொண்டை, காதுகளில் நீண்ட குண்டலங்கள், கழுத்தில் ஆபரணங்கள், வலது கையை தூக்கி அபய (ஆசீர்வதித்தல்) முத்திரையும், இடது கையை இடது கால் தொடை மீது வீரன் வைத்துள்ளார். அந்த கையில் கத்தி ஒன்றும் உள்ளது. 2 கால்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல்களும், கைகளில் கடங்களும் அணிந்துள்ளார்.

வீரனின் அருகே, உடன்கட்டை ஏறிய பெண் ஒருவர் உருவமும் உள்ளது. அவளது காதுகளில் நீண்ட காதணிகள், வலது கை தொங்கவிடப்பட்டுள்ளது. இடது கையில் மலர் போன்ற முத்திரையும் காணப்படுகிறது. இந்தப் பெண் கழுவேற்றப்பட்ட வீரனின் மனைவியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தன் கணவனை பகைவர்கள் கொன்றுவிட வீரனின் மனைவியும் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறி இறந்துபோனதால் வீரனின் மனைவிக்கும் நடுகல் வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

கழுவேற்றத் தண்டனைக்கு உரியோருக்கும் அவனோடு இறந்துபோன வீரனின் மனைவிக்கும் நடுகற்களை அந்தக் கால மக்கள் வைத்துள்ளனர் என்பதை ஆராயும்போது, இந்த வீரன் தவறு செய்து, அதற்கான தண்டனையைப் பெற்று இறந்தவன் போலத் தெரியவில்லை. ஊருக்காகப்போராடி பகைவர்களால் கொல்லப்பட்டவனாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாக அவரது மனைவியும் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியிருக்கலாம்.

இந்த 2 நடுகற்களும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தி உள்ளனர். இதுபோன்ற வரலாற்று ஆவணங்களை மாவட்டத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அவற்றை ஆவணப்படுத்த முன்வர வேண்டும்" என்றார்.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

திருப்பத்தூரில் பிரபல டி. வி. ஷோ ரூமில் கொள்ளை

 திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடில் தூயநெஞ்சக் கல்லூரி வணிக வளாகத்தில் டார்லிங் ஷோரூம் இயங்கி வருகிறது.

நேற்று இரவு சுமார் 1 மணியளவில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்துள்ளனர். சி சி டிவி கேமராவை உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.

லேப்டாப், மொபைல்கள் காணவில்லை. மேலும் என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்ற விபரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

தகவல் அறிந்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  








FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Thursday, September 3, 2020

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை.

 


தமிழகத்தில் மாவட்டங்களுக்குள் மட்டும் பொது போக்குவரத்து கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி, வருகிற 7ஆம் தேதி முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை தொடங்க உள்ளது.

மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர, பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பயணங்களை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

ஐந்தரை மாதங்களுக்குப் பின், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படுவதால், அதிகளவில் பயணிகள் போக்குவரத்து நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணி நிமித்தமாகவும், வர்த்தக ரீதியாகவும் இனி வெளியூர்களுக்கு செல்வதில் எந்த சிரமமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

Tuesday, September 1, 2020

பழனி முருகன் தரிசனத்திற்கு இணையத்தில் முன் பதிவு

 


பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய இணையத்தில் முன் பதிவு செய்‌வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சீட்டு இருந்தால் மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் படி வழியாக மட்டுமே மலை ஏற முடியும் என்றும் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கரதம், அன்னதானம் போன்ற வழக்கமான நிகழ்வுகளும் நிறுத்திவை‌க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கோயிலுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு - அரசு அறிவிப்பு

 
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

டில்லி: உடல்நலக் குறைவால், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காலமானதை அடுத்து, அவரது உடலுக்கு இன்று (செப்.,1) இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
    
    இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84), கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டு காரணமாக டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஆக.,31) அவர் காலமானதாக அவரின் மகன் அபிஜித் முகர்ஜி டுவிட்டரில் தெரிவித்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் செப்டம்பர் 6ம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் காலை 9.15 முதல் 10.15 வரை முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் ராஜாஜி மார்க்கில் அவரது உடல், பொதுமக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேரம் வைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக அவரது உடல், ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்படும் என்றும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    பிரணாப் முகர்ஜியின் மரணம் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் உயரிய பதவிகளை அலங்கரித்து தங்கள் மாநிலத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாநில அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'மரணமடைந்த முன்னாள் ஜனாதிபதியும், வங்காளத்தின் புகழ்பெற்ற மகனுமான பிரணாப் முகர்ஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது,' எனப் பதிவிட்டுள்ளது.
 

 
 
 
  
FOLLOW US OUR SOCIAL MEDIAS

          

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது ஜேஇஇ தேர்வுகள்!

 

 டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகள் இன்று முதல் வரும் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று தேர்வுகள் தொடங்குகின்றன. ஐஐடி, என்ஐடி, மத்திய அரசின் நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயில்வதற்காக ஜேஇஇ எனும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருந்தது.

     அது போல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் வரும் 13-ஆம் தேதி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த இரு தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, வெள்ள பாதிப்புகளால் இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க புதுவை, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன. தேர்வுகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்கும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த நிலையில் ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.
 
இந்த தேர்வை எழுத 16 லட்ச மாணவர்கள் பதிவு செய்துள்ளார்கள். மாணவர்கள் பாதுகாப்பாக தேர்வு எழுத மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறுகிறது. ஜேஇஇ, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் http://eduride.in என்ற இணையதளம் மூலம் போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை பெறலாம் என ஐஐடி மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் ஒரு போர்ட்டலை தொடங்கியுள்ளனர்.


FOLLOW US OUR SOCIAL MEDIAS