டெல்லி: அனைத்து பள்ளிகளிலும் இனி மும்மொழித் திட்டம் அமல்படுத்தப்படும்;
6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி கற்பிக்கப்படும்; அனைத்து கல்வி நிலைகளிலும்
உலகளாவிய அணுகுமுறை உறுதி செய்யப்படும் என்கிறது மத்திய அரசின் புதிய
கல்விக் கொள்கை.
புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி
செய்தல்
மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும்
பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக்
கொள்கை 2020 வலியுறுத்துகிறது.
கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சிக்கான கல்வி மையங்கள் போன்றவை
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க
உதவுவதுடன், மாணவர்களையும், அவர்களது படிப்புத் திறனையும் தொடர்ந்து
கண்காணித்ததல், முறைசார்ந்த மற்றும் முறைசாரா கல்வி முறைகளை உள்ளடக்கிய
கல்விக்கான பலதரப்பட்ட வழிகளை ஏற்படுத்தித் தருதல், ஆலோசகர்களின்
ஒத்துழைப்பு அல்லது நன்கு பயிற்சிபெற்ற சமூகப் பணியளார்களை பள்ளிகளிலேயே
ஏற்படுத்தித் தருவது.
3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு, தேசிய
திறந்தவெளிப் பள்ளி மற்றும் மாநில திறந்தவெளிப் பள்ளிகள் வாயிலாக கல்வி
புகட்டுதல், 10 மற்றும் 12ஆம் நிலைகளுக்கு இணையான இடைநிலைக் கல்வி பாடத்
திட்டங்கள், தொழிற்கல்விப்பாடங்கள், முதியோர் கல்வி மற்றும் வாழ்க்கை
மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இலக்கினை அடைவதற்கான யோசனைகளாக
தெரிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும்
பள்ளியில் சேர்க்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில்,
தற்போதுள்ள 10, +2 பாடத்திட்ட முறை
மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3
+ 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்.
இதுவரை பள்ளிக்கு வராத 3- 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம்
படிப்பதற்கு இந்த புதிய முறை உதவும்.
குழந்தைகளின் மனநிலைக்கேற்ற
ஆசிரியர்களை உருவாக்க, இந்த காலகட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாக
உள்ளது.
புதிய கல்வி முறை, 3ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12
பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.
8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும்
கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National
Curricular and Pedagogical Framework for Early Childhood Care and
Education - NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
(NCERT) உருவாக்கும்.
முன்குழந்தைப் பருவ கவனிப்பு, கற்பித்தல் மற்றும் பாடத்திட்டத்தில்
நன்கு பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்ட,
விரிவுபடுத்தப்பட்ட மற்றும் அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் போன்ற
வலுப்படுத்தப்பட்ட மையங்கள் மூலம் முன்குழந்தைப் பருவ கவனிப்பு
வழங்கப்படும். முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி முறையை, மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை,
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள்
மூலம் கூட்டாக மேற்கொள்ளப்படும்.
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு ஆகியவை கல்வி பயில்வதற்கான
இன்றியமையாத உடனடித் தேவையாக இருப்பதால் அவற்றை முன் தகுதியாக
அங்கீகரிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால், தேசிய
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு இயக்கம் ஒன்றைத் தொடங்க தேசிய
கல்விக்கொள்கை 2020இல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தொடக்கப்
பள்ளிகளிலும் 2025-க்குள் 3-ஆம் நிலை வரை அனைவரும் பயில ஏதுவாக, உலகளாவிய
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்த
மாநில அரசுகள் தயாராக வேண்டும். தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும்
வகுக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தலில், கற்போரின் ஒட்டுமொத்த
வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடம் 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற
முக்கியமான திறமைகளை ஏற்படுத்துவதோடு, அவசியமானவற்றைக் கற்கும் திறனை
மேம்படுத்துவதற்கேற்ப பாடத்திட்டத்தைக் குறைப்பதுடன், சோதனை அடிப்படையிலான
கல்வி மற்றும் சிந்தனைக்கு பெருமளவு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும்.
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட
மாட்டார்கள், பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்திற்கு
அப்பாற்பட்டவற்றையும் கற்பதற்கும், தொழிற்கல்வி மற்றும் வழக்கமான கல்வி
முறைக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது.
பள்ளிக்கூடங்களிலேயே 6-ஆம் நிலை முதற்கொண்டே தொழிற்கல்வி
பயிற்றுவிக்கப்படுவதோடு, உள்ளுறை பயிற்சிமுறையைக் கொண்டதாகவும் இருக்கும்.
புதிய மற்றும் விரிவான பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக்
கட்டமைப்பு 2020-21 (National Curricular Framework for School Education,
NCFSE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால்
ஏற்படுத்தப்படும்.
குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும், ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும்
அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும், தாய்மொழி/ உள்ளூர் மொழி/
பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை
வலியுறுத்துகிறது.
மும்மொழித் திட்டம் உள்பட அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும்
உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில்
வழங்கப்படுகிறது. இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும்
விருப்பப் பாடங்களாக இருக்கும்.
எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது. 'ஒரே பாரதம்
உன்னத பாரதம்' முன்முயற்சியின் கீழ், 6 முதல் 8 வரையான வகுப்புகளில் 'இந்திய மொழிகள்' குறித்து மாணவர்கள் வேடிக்கை செயல் திட்டம்/நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இடைநிலைக் கல்வி மட்டத்தில், பல்வேறு
வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படும்.
நாடு முழுவதும் இந்திய அடையாள மொழி
தரப்படுத்தப்படும். செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களின்
பயன்பாட்டுக்காக, தேசிய, மாநில பாடத்திட்டப் பொருள்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய கல்வி கொள்கை 2020, சுருக்கமான மதிப்பீட்டிலிருந்து, வழக்கமான,
முறையான மதிப்பீட்டுக்கு மாறுவதை எதிர்நோக்குகிறது. இது ஆய்வுகள், விமர்சன
சிந்தனை, கருத்தியல் தெளிவு போன்ற உயர் திறன்களுக்கு ஏற்ற வகையில் ,திறன்
அடிப்படையிலான ,கற்றல் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
3,5,8-ஆம்
வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் உரிய ஆணையம் நடத்தும் பள்ளித்
தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்
தேர்வுகள் தொடரும். அதேசமயம் முழுமையான மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு,
திருத்தியமைக்கப்படும். புதிய தேசிய மதிப்பீட்டு மையம், பராக் - திறன்
மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் முழுமையான மேம்பாட்டுக்கான அறிவுப்
பகுப்பாய்வு ) (PARAKH - Performance Assessment, Review, and Analysis of
Knowledge for Holistic Development) நிலையான அமைப்பு ஒன்றால்,
உருவாக்கப்படும்.
புதிய கல்வி கொள்கை 2020, எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை
காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ ,கற்பதுடன் சிறந்து விளங்கும், எந்த
வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.
பாலினம், சமூக-கலாச்சாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள்
உள்பட சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுக்களுக்கு சிறப்பு
முக்கியத்துவம் அளிக்கப்படும். பின்தங்கிய பகுதிகள் மற்றும் குழுக்களுக்காக
பாலின உள்ளடக்க நிதி, சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைப்பதும் இதில்
அடங்கும்.
உடல் குறைபாடு உள்ள குழந்தைகள் , வழக்கமான பள்ளிப்படிப்பை
அடிப்படையிலிருந்து உயர் கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும்.
முழுமையான உடல் குறைபாட்டுப் பயிற்சி, ஆதார மையங்கள், வசதிகள், உதவிகரமான
கருவிகள், பொருத்தமான தொழில்நுட்ப அடிப்படையிலான உபகரணங்கள், அவர்களது
தேவைக்குப் பொருத்தமான இதர பொறிமுறை ஆதரவு ஆகியவற்றுடன் கல்வி
கற்பிப்போரின் உதவியும் இதில் இருக்கும். ஒவ்வொரு மாநிலமும்/ மாவட்டமும் ,
பகல் நேர உறைவிடப் பள்ளியாக'' பால பவன்கள்''_ஐ அமைக்க ஊக்குவிக்கப்படும்.
கலை தொடர்பான , தொழில் தொடர்பான, விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளில்
பங்கேற்கும் வகையில் இது செயல்படும்.
இலவசப் பள்ளிக் கட்டமைப்பு, சமாஜிக்
சேத்னா மையங்களாகப் பயன்படுத்தப்படும்.
ஆசிரியர்கள், வலுவான , வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில்
பணியமர்த்தப்படுவார்கள். தகுதி அடிப்படையிலும், பல ஆதார, கால அளவிலான
செயல்திறன் மதிப்பீடு, கல்வியியல் நிர்வாகிகள் அல்லது ஆசிரிய
கற்பிப்பாளர்களாக உயரும் வகையிலான முன்னேற்ற வழிமுறைகளின்படியும் , பதவி
உயர்வு இருக்கும். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம்
(NCERT), மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (SCERT) ஆகிய
அமைப்புகள்எல்லா பிராந்தியங்கள் மற்றும் மட்டத்திலுமான ஆசிரியர்கள் மற்றும்
நிபுண அமைப்புகளுடன் கலந்தாலோசித்து, ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறைத்
தரம் என்ற ஒரு பொதுவான அமைப்பு உருவாக்கப்படும்.
பள்ளிகள் வளாகங்களாகவோ, தொகுப்புகளாகவோ அமைக்கப்படும். உள்கட்டமைப்பு,
கல்வி நூலகங்கள், வலுவான தொழில்முறை ஆசிரியர் சமூகம் உள்ளிட்ட அனைத்து
வளங்களும் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில், நிர்வாகத்தின் அடிப்படை
அலகாக அது இருக்கும்.
புதிய கல்வி கொள்கை 2020 , கல்வி தொடர்பான விஷயங்கள் மற்றும் கொள்கை
வகுத்தல், முறைப்படுத்துதல், இயக்குதல் ஆகியவற்றுக்கு தெளிவான, தனி
நடைமுறைகளைக் கொண்டுள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், சுதந்திரமான
மாநில கல்வித் தர ஆணையத்தை (SSSA) அமைத்துக் கொள்ளும்.
அனைத்து அடிப்படை
ஒழுங்குமுறைத் தகவல்களையும் வெளிப்படையாகவும், பொது சுய- அறிவிப்பு
வழியாகவும், மாநில கல்வித் தர ஆணையத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப அளிக்க
வேண்டும். அது விரிவான பொது மேற்பார்வை மற்றும் பொறுப்புடைமையாக விரிவாகப்
பயன்படுத்தப்படும். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம்
(SCERT) , பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார வரைமுறையை , தொடர்புடைய
அனைவருடனும் கலந்தாலோசித்து உருவாக்கும்.
புதிய கல்விக் கொள்கை 2020 , உயர் கல்வியில் மொத்தப் பதிவு விகிதத்தை
அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தொழில் கல்வி விகிதத்தை 26.3
சதவீதத்திலிருந்து ( 2018) , 2035-ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதமாக
உயர்த்துவது இதில் அடங்கும்.
உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்கள் சேர்க்கப்படும்.
நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள்,
ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு,
வெளியேறுதல் ஆகியவற்றுடன், விரிவான அடிப்படையிலான , பன்முக, முழுமையான
இளநிலைப் பட்ட ப் படிப்பை கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. இளநிலை பட்டக்
கல்வி , பன்னோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக
இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும்.
உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர்
மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4
ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.
பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கல்வி மதிப்பெண்களை
டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்க , அகாடமிக் கிரெடிட் வங்கி
உருவாக்கப்படும்.
இது கடைசியாக பட்டம் வழங்கப்படும் போது சேர்ப்பதற்கு
வாய்ப்பாக அமையும்.
நாட்டில் உலக தரத்துக்கு இணையாக சிறந்த பன்னோக்கு கல்வி வழங்கும் மாதிரி
அமைப்பாக, ஐஐடிக்கள், ஐஐஎம்கள் ஆகியவற்றுக்கு இணையாக, பன்னோக்குக் கல்வி
மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
உயர் கல்வியில், ஆராய்ச்சித் திறனைக் கட்டமைக்கவும், வலுவான ஆராய்ச்சிக்
கலாச்சாரத்தை வளர்க்கவும், ஒரு உயர் அமைப்பாக, தேசிய ஆராய்ச்சி பவுண்டேசன்
உருவாக்கப்படும்.
மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும்
ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும். இந்திய உயர்
கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒழுங்குமுறைக்காக தேசிய
உயர் கல்வி ஒழுங்குமுறைக் குழு, தர நிர்ணயித்தலுக்காக பொதுக் கல்விக் குழு,
நிதியுதவிக்காக உயர் கல்வி மானியக் குழு மற்றும் அங்கீகாரத்துக்காக தேசிய
அங்கீகாரக் குழு. தொழில்நுட்பத்தின் உதவியுடன் முகமில்லா இடையீடு மூலமாக
செயல்படும் இந்திய உயர் கல்வி ஆணையம், விதிகள் மற்றும் தரங்களைப்
பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
ஒழுங்குமுறை,
அங்கீகாரம் மற்றும் கல்வித் தரத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி
நிறுவனங்கள் ஒரே மாதிரியான விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.
உயர்தரக் கற்றல், ஆய்வு மற்றும் சமூகத் தொடர்பை வழங்கும் மிகப்பெரிய, நல்ல
வளங்களையுடய, துடிப்பான பல்துறை நிறுவனங்களாக உயர்கல்வி நிறுவனங்கள்
மாற்றியமைக்கப்படும். ஆய்வில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழகங்கள்,
கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழங்கள் மற்றும் தன்னாட்சி
பெற்ற பட்டம் வழங்கும்
கல்லூரிகள் என பல்கலைக்கழகத்துக்கான விளக்கம் பல்வேறு கல்வி நிறுவனங்களை
உள்ளடக்கியதாக இருக்கும்.
கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் மற்றும்
கல்லூரிகளுக்கு தன்னாட்சியை கட்டம் கட்டமாக படிப்படியாக வழங்குவதற்காக பல
படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படும். சில காலத்துக்கு பிறகு,
ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ
அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஊக்கம் நிறைந்த, உற்சாகமுள்ள ஆசிரியர்களை தெளிவாக வரையறுக்கப்பட்ட,
சுதந்திரமான, வெளிப்படையான முறையில் பணியமர்த்தவும், பாடத்திட்டங்களை
வடிவமைக்க சுதந்திரம் அளிக்கவும், திறமைக்கு ஊக்கமளிக்கவும், கல்வி
நிறுவனத் தலைமையை நோக்கி முன்னேறவும் தேசியக் கல்விக் கொள்கை
பரிந்துரைக்கிறது.
அடிப்படை விதிகளை பின்பற்றாத ஆசிரியர்கள் அதற்கு
பொறுப்பேற்க வைக்கப்படுவார்கள்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்து புதிய
மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு, 2021, தேசிய
கல்வி மற்றும் பயிற்சிக் குழுவால் வடிவமைக்கப்படும். 2030-க்குள்
கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி எட் பட்டமாக
இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய மொழிகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த மற்றும் பல்கலைக்கழக/கல்லூரி
ஆசிரியர்களுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால கற்றல்/தொழில்முறை ஆதரவை
அளிக்க விரும்பும் திறன்வாய்ந்த மூத்த/ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட
தேசிய கற்பித்தல் இயக்கம் அமைக்கப்படும்.
எஸ் சி, எஸ் டி, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர மாணவ தொழில்முனைவோர்
வளர்ச்சிப் பிரிவுகளை சார்ந்த நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கல்வி உதவித்தொகையைப் பெறும்
மாணவர்களின் முன்னேற்றத்தை ஆதரித்து, மேம்படுத்தி மற்றும் கண்காணிக்க தேசிய
கல்வி உதவித்தொகை தளம் விரிவுபடுத்தப்படும்.
தங்களது மாணவர்களுக்கு அதிக
அளவில் இலவச கல்வி மற்றும் கல்வி உதவித்தொகையை அளிக்க தனியார் உயர்கல்வி
நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.
கல்விபெறும் ஒட்டுமொத்த விகிதத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றும்
விதத்தில் இது விரிவுப்படுத்தப்படும். இணைய வழி படிப்புகள், டிஜிட்டல்
சேமிப்புத் தளங்கள், ஆராய்ச்சிக்கு நிதியுதவி, மேம்படுத்தப்பட்ட மாணவர்
சேவைகள், திறந்தவெளி இணைய வழிப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குதல்
ஆகியவற்றுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வகுப்புகளில் கற்பிக்கப்படும்
கல்வியின் உச்சபட்ச தரத்துக்கு இணையாக இது திகழ்வது உறுதி செய்யப்படும்..
தொற்று நோய்கள் மற்றும் பெருந்தொற்று சமயங்களில், சமீபத்திய நிலைமையைக்
கருத்தில் கொண்டு, பாரம்பரியமான மற்றும் நேரடிக் கல்வி எங்கெல்லாம்
சாத்தியமில்லையோ அங்கெல்லாம் இணைய வழிக் கற்றலை ஊக்குவிக்க, தரமான மாற்றுக்
கல்வியை வழங்குவதற்கான தயார் நிலையை உறுதி செய்ய விரிவான பரிந்துரைகள்
வகுக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பாடங்கள் மற்றும்
திறன் வளர்த்தல் ஆகியவற்றைக் கட்டமைக்க மனித வள மேம்பாடு அமைச்சகத்தில் ஒரு
பிரத்யேகப் பிரிவு உருவாக்கப்பட்டு, கல்வி மற்றும் உயர்கல்வியின்
மின்-கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
கல்வி, மதிப்பிடுதல், திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்தில்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் யோசனைகளைத் தடையின்றி பகிர்ந்து கொள்ள
தேசிய கல்வி தொழில்நுட்பப் பேரவை என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு
உருவாக்கப்படும். வகுப்பறை செயல்முறைகள், ஆசிரியர் தொழில்முறை
மேம்பாட்டுக்கு ஆதரவு, வசதி குறைந்த பிரிவினருக்கு கல்விக்கான அணுகுதலை
அதிகரித்தல் மற்றும் கல்வித் திட்டமிடுதல், நிர்வாகம் மற்றும் மேலாண்மை
ஆகியவற்றுக்கு அனைத்து மட்டங்களிலும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு
தேவையான அளவில் செய்யப்படும்.
அனைத்து இந்திய மொழிகளின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் துடிப்புடன்
இயங்கும் தன்மையை உறுதி செய்ய, இந்திய மொழிபெயர்ப்பு மற்றும் விளக்க
நிறுவனம், பாலி, பெர்சிய மற்றும் பிராக்ரித்துக்கான தேசிய நிறுவனம் (அல்லது
நிறுவனங்கள்), உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் மற்றும் இதர மொழித்
துறைகள் மற்றும் அதிக உயர்கல்வி நிறுவனங்களில் தாய்மொழி/உள்ளூர் மொழியில்
கற்பித்தலை உறுதி செய்தல் ஆகியவற்றை தேசியக் கல்விக் கொள்கை
பரிந்துரைக்கிறது.
கல்வி நிறுவனங்களுக்கிடையேயான கூட்டுச் செயல்பாடு, மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை
நமது நாட்டில் வளாகங்கள் அமைக்கச் செய்வது ஆகியவற்றின் மூலம் கல்வியின்
சர்வதேசமயமாக்கலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து தொழில்முறை படிப்புகளும் உயர் கல்வி அமைப்பின் இன்றியமையாத அங்கமாக
இருக்கும். தனிப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள், சுகாதார அறிவியல்
பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்நோக்கு
நிறுவனங்களாக ஆவதற்கு முயற்சி செய்யும்.
இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்ய கொள்கை
எண்ணுகிறது.
கல்வித் துறையில் பொதுமுதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை
விரைவில் எட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும்.
இவ்வாறு மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.